Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

நல்லதொருகுடும்பம் - - - - கணவன் – மனைவி!

குறிப்பு:- இந்த ஆக்கம் யாரையும் குறிப்பிட்டோ, அல்லது குத்திக் காட்டியோ எழுதப்பட்டது அல்ல, பொதுவாக மானிடர் வாழ்வில் நடக்கின்ற சம்பவங்களை பல நாட்களுக்கு மத்தியில் பல கோணங்களில் சிந்தித்து மற்றும் பெரும்பான்மையான குடும்பங்களை சந்தித்து தொகுக்கப்பட்ட ஒரு ஆக்கமாகும்.

மானிடவியலில் எத்தனை உறவுகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமானவை. அப்பா-உம்மம்மா, வாப்பா-உம்மா, காக்கா-தம்பி, ராத்தா-தங்கச்சி, மாமா-மாமி, மச்சான்-மச்சி, பெரியப்பா-சின்னவாப்பா, பெரியம்மா-சின்னம்மா, இன்னும் அநேக உறவு வட்டங்கள் நம் மத்தியில் வட்டமடித்துக் கொண்டு இருந்தாலும் அதையும் தாண்டி உள்ள ஒரு உன்னதமான உறவுதான் கணவன் மனைவி என்ற உறவு. இந்த கணவன் மனைவி உறவு சிலருக்கு சந்தோஷமாக அமைவதுண்டு, இன்னும் சிலருக்கு பாதிக்கு பாதி தேவலாம் என்றும், பலருக்கு ஏன்தான் இப்படி அமைந்ததோ என்றும் இருப்பதுண்டு. ஆக மொத்தத்தில் திருப்த்தி அடைவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

இந்த உலகத்தில் சந்ததிகளை, குடும்பங்களை, மக்கள் செல்வங்களைப் பெருக்க இறைவனுக்கு இரண்டு பாத்திரங்கள் தேவை, அதில் ஒன்று ஆண், மற்றொன்று பெண், இதே போன்று தான் எல்லா ஜீவராசிகளுக்கும், இறைவன் தான் விரும்பியபடி ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்று ஜோடிகளை சேர்த்து வைக்கின்றான், ஆக மொத்தத்தில் கணவனுக்கு மனைவி அடிமை இல்லை, மனைவிக்கு கணவன் அடிமை இல்லை, இரண்டு பேரும் சரிசம உரிமைகளை பெற்றவர்கள். அப்படி சம உரிமைகளை மனைவி பெற்றிருந்தாலும் கணவனுக்கு கீழ்படிய கடமை பட்டவள், அப்படி கணவனுக்கு கீழ்ப்படிந்து நடந்தாலும் கணவன் மனைவிக்கு உண்மையாக நடந்து கொள்ள கடமைப்  பட்டவன், அதுபோல் மனைவியும் கணவனுக்கு உண்மையாக நடந்து கொள்ள கடமைப் பட்டவள், இந்த விஷயத்தில் ஒரு துளிகூட தடம் மாறாமல் இருக்க வேண்டிய பொறுப்பு கணவன் மனைவி இருவருக்கும் உண்டு.

பொதுவாக மனைவிமார்கள்(இல்லத்தரசிகள்) வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வதிலும், கணவன்மார்கள் பொருள் ஈட்டுவதற்காக வீட்டை விட்டு வெளியில் செல்வது வழக்கம், இதுதான் மரபும் கூட. கணவன்மார்கள் குடும்பத்தை பிரிந்து ஊர் எல்லைகளைக் கடந்தும், மாவட்ட எல்லைகளைக் கடந்தும், மாநில எல்லைகளைக் கடந்தும், பல தேசங்களையும் கடல்களையும் கடந்து பொருள் ஈட்டுவதற்காக சென்றுவிடுகின்றனர். உள்நாடுகளில் இருப்பவர்கள் சமயம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தை பார்த்துவிட்டு போவது வழக்கம், வெளிநாட்டில் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ, மூன்று வருடத்திற்கு ஒரு முறையோ குடும்பத்தை வந்து பார்த்து விட்டு மீண்டும் திரும்பிச் செல்வது வழக்கம், இன்னும் சிலர் குடும்பத்தோடு அங்கு இருப்பதும் உண்டு,  இன்னும் சிலர் இதையெல்லாம் கடந்து ஊருக்கே வராமல் உடம்பில் இருக்கின்ற பலம் குன்றும் அளவுக்கு, தலை முடியெல்லாம் வெழுத்து, பற்களெல்லாம் பழுதாகி, முகத்தோற்றம் உருமாறி, அடையாளம் சிதைந்து குழைந்து ஊர் வருவதும் உண்டு, இன்னும் சிலர் ஊர் வராமலேயே அப்படியே போய்விடுவதும் உண்டு, இதையும் கடந்து வேறு சிலர் தகாத உறவுகளோடு திருட்டுத்தனமாக வாழ்வதும் உண்டு, இப்படி பல சம்பவங்கள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

பெண்ணுக்கு சுதந்திரம் வீட்டில்தான், வெளியில் கிடையாது, பெண் ஏதேனும் வேலை விஷயமாக வெளியில் செல்வதாக இருந்தால் தகுந்த துணையோடு செல்ல வேண்டியது பெண்களின் கடமை, அதை கவனமாக பார்த்துக் கொள்வது கணவன், பெற்றோர்கள், உடன் பிறந்த சகோதரன், இருபது வயதை கடந்த மகன், தாய் மாமா, மாமியா மாமனார் இவர்களின் தலையாய கடமை. பெண் வெளியில் செல்லும் முன் கணவன், பெற்றோர்கள், உடன் பிறந்த சகோதரன், இருபது வயதை கடந்த மகன், தாய் மாமா, மாமியா மாமனார், இவர்களில் யார் அருகில் இருக்கின்றாரோ அவரிடத்தில் முறையாக அனுமதி பெறுவதோடு தகுந்த துணையோடு போகவேண்டும். என்ன வேலையாக போகின்றோம் எப்போ திரும்பி வருவோம் போன்ற விபரத்தையும் அந்த பெண் தர வேண்டும். பல வேளைகளில் பெண்கள் தகுந்த துணையோடு வெளியில் செல்லாததினால் ஜீரணிக்க முடியாத பல மோசமான சம்பவங்கள் நடந்து அனைவரையும் ஆழ்ந்த துக்கத்தில் கொண்டு போய் விடுகின்றது.

பெண்களே! நீங்கள் தேர்ந்து எடுக்கும் உடைகள் ஒரு ரூபாயோ அல்லது ஒரு கோடியோ அது முக்கியமல்ல மானத்தை பாதுகாக்கக்கூடியதாக, விலையில் சிக்கனமானதாக உள்ள உடையாக தேர்ந்து எடுக்க வேண்டும். ஆண்களே! நீங்கள், பெண்களை அவர்கள் இஷ்டத்துக்கு விட்டு விடாதீர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும், இதற்க்கு பெண்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இன்று எத்தனை பெண்கள் பெற்றோர்கள்குடும்பத்தார்கள் மற்றும் கணவர் சொல்படி நடந்து கொள்கின்றனர்? பெண்களே, மேலே சொல்லப்பட்டவைகளில் நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்று நீங்களே உங்களை நன்கு ஆராய்ந்து பார்த்தது உண்டா?

பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் முறையாக நன்கு வளர்த்து பெரியவளாக்கி ஒருத்தனுக்கு மனைவியாக கொடுக்கின்றனர். கணவனாக வருகின்றவன் தன் மகளை நன்கு வாழவைப்பார், சந்தோஷமாக வைத்துக் கொள்வார், கண் கலங்க விடமாட்டார், எந்த சூழ்நிலையிலும் மனைவியாக வைத்து பாதுகாப்பார், இறுதிவரை(மரணம் சம்பவிக்கும்வரை) கணவன் மனைவியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு அனுப்பி வைக்கின்றனர்.

ஒருத்தனுக்கு மனைவியாக போகும் அந்தப் பெண் ஒரு மெல்லிய கண்ணாடி பாத்திரத்தை (கிளாஸ்) போன்றவள், அந்த மெல்லிய கண்ணாடி பாத்திரத்தை (கிளாஸ்) நெருக்கி பிடித்தாலும் உடைந்துவிடும், அப்படி உடைந்துவிடும் என்று நினைத்து பிடியை தளர்த்தினாலும் கீழே விழுந்து உடைந்துவிடும், மனைவியும் அப்படித்தான்..  

தன்னை நம்பி வந்த மனைவியை அடிப்பதற்கோ, நொசுவனை செய்வதற்கோ, வாயில் வந்தபடி திட்டுவதற்கோ, மன நோக அடைவதற்கோ, மனைவிக்கு எதிராக நடப்பதற்கோ கணவனுக்கு ஒரு துளிகூட உரிமை கிடையாது, அதேபோல கணவனுக்கு எதிராக நடந்துகொள்ள மனைவிக்கும் ஒரு துளிகூட உரிமை கிடையாது. ஏதேனும் தவறுகள்  நடக்குமேயானால் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் முறையிட்டு சரி செய்து கொள்ளவேண்டும்.

குடுபத்தின் தேவைகளை மனைவி கணவனுக்கு தெரியப்படுத்துவது கட்டாய கடமைகளில் ஒன்று, அதை முறையாக ஆலோசித்து சரிபார்த்து சிந்தித்து செயல்படுவது கணவனின் முழுப் பொறுப்பு, உள்ளூரிலோ, வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ கணவன் இருந்தாலும் குடும்பம் சம்பத்தப்பட்ட அனைத்து தேவைகள் நடவடிக்கைகளையும் நன்கு கவனிப்பதோடு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருத்தல் அவசியம். தேவையை நன்கு ஆராய்ந்து அறிந்து பணத்தை பெற்றோர்களுக்கு அனுப்பி வைத்து மனைவிக்கு கொடுக்கச் சொல்லலாம், அல்லது நேரடியாகவே மனைவிக்குக்கூட அனுப்பலாம்.
   
பல கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கு அதிக சுதந்திரத்தை கொடுப்பதோடு கணக்கில்லாமல் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அள்ளி அள்ளி கொடுக்கின்றனர் / கொடுத்துக் கொண்டும் வருகின்றனர்.

இது மட்டுமா? இன்னும் இருக்குது, ஒரு சில மனைவிகள் கணவன் அனுப்பிவைத்த பணத்தை சிக்கனப்படுத்தி மீதியை சேர்த்து வைக்கின்றனர், ஆனால் பலர் அப்படி இருக்காமல் கண்டபடி சிலவு செய்துவிட்டு அதுவும் போதாமல், கணவனுக்கும் குடும்பத்தாருக்கும் தெரியாமல் வெளியில் வட்டிக்கு கடன் வாங்கியோ அல்லது வங்கியில் நகைகளை அடகு வைத்தோ மீதமுள்ள ஆடம்பர சிலவுகளை செய்கின்றனர். கணவன் ஊர் வந்து கணக்கு கேட்டால் ஈரான் ஈராக்கு போர்தான். இதன் காரணமாக நிம்மதி குழைந்து மன உளைச்சலுக்கு ஆளான எத்தனையோ குடும்பங்கள் உண்டு, அதுமட்டுமா? விவாகரத்து வரை சென்ற குடும்பங்களும் உண்டு.

இங்கு ஒரு உண்மை சம்பவத்தை மட்டும் சொல்ல விரும்புகின்றேன். அது யார் எந்த ஊர் போன்ற விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளது, நான் கடந்த சிலவாரங்களுக்கு முன் ஒரு கடைக்கு போய் இருந்தேன், அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாமான்கள் விற்பனை செய்யப்படுகின்றது. நான் அந்த கடைக்கு சென்ற நேரம் ஒரு பெண் அங்கு வந்து பல புடவைகளை பார்த்து விட்டு ஒரு புடவையை மட்டும் தேர்ந்து எடுத்து விலையை கேட்டாள், விலை 1550 ரூபாய் என்று கடைக்காரர் சொன்னார், அந்தப் பெண் அந்தப் புடவையை விலைகொடுத்து வாங்கியபின், கடைகாரரிடம் என் கணவர் உங்களிடம் கேட்டால் நீங்கள் 2750 ரூபாய் என்று சொல்லவும் என்று சொல்ல, அதற்கும் கடைகாரர் புன்சிரிப்போடு தலையை ஆட்டி தன் சம்மதத்தை தெரிவித்தார்.   

இதுமாதிரி எல்லாம் நடப்பதற்கு யார் காரணம்? கணவனான ஆண்களே நீங்கள்தான். ஒவ்வொரு உறவு முறைகளையும் அந்தந்த ஸ்தானத்தில் வைத்து பார்க்க வேண்டும். மனைவியை மனைவி என்ற ஸ்தானத்தில் வைத்து பார்க்க வேண்டும்.

இன்றைய சில/பல பெண்களுக்கு தோழிகள் வட்டாரங்கள் மிகவும் அதிக அளவில் பெருகிவிட்டது. கூடவே செல்போன்களின் ரேட்கட்டர் வசதிகள் வரவே, ஒரு நாளைக்கு சராசரியாக அதிகப்படியான நேரங்களை தோழிகளிடத்தில் செல்போனில் பேசுவதையே கழிக்கின்றனர், அதாவது ATSS ( எனி டைம் ஸ்பீகிங் சிஸ்டம்). மேலும் வெளிநாட்டில் உள்ள கணவனிடத்தில் நெட் கால் மூலமாகவும், இன்டர்நெட் வசதியுடன் ஸ்கைப்பில் முகம் பார்த்து பேசுவதிலும் நேரங்களை கடத்துக்கின்றனர், தேவையான விஷயங்களை பேசுவதில் தவறில்லை. அதுவும் அளவோடு பேசினால் நல்லது. தேவையற்ற விஷயங்களை பேசுவதினால் என்ன இலாபம்?

விளைவு:-
ஐவேளை தொழுகைகள், அன்றாட வீட்டு வேலைகள், பள்ளி மற்றும் பள்ளிக் கூடம் செல்லும் குழந்தைகளின் கவனிப்புகள் இன்னும் அனேக காரியங்கள் அந்தந்த நேரங்களில் முடியாமல் தடைப்பட்டு ஒவ்வொரு நாளும் இப்படியே கழிகின்றதாம்.

இதை நானாக எழுதவில்லை, பல பெற்றோர்களின் குமுறல்கள் என் காதுகளுக்கு விழவே இப்படி எழுதத் தூண்டியது. மேலும் அந்த பெற்றோர்கள் சொன்னது, மருமகன் வந்து மனைவி மக்களுக்கு ஒரு லேப்டாப் கம்ப்யூடர் வாங்கி கொடுத்து இன்டர்நெட் இணைப்பும் எடுத்து கொடுத்துவிட்டார், இந்த புள்ளைங்க சொல்லு கேட்பதே கிடையாது.    

அன்பான பொறுப்பான கணவர்களே, பொருள் ஈட்ட வீட்டை விட்டு வெளியில் செல்லும் நீங்கள் எந்த அளவுக்கு முழுப் பொறுப்புடன் இருக்கின்றீர்கள் என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். உங்கள் குடும்பம், மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக பொருள்களை ஈட்டி குடும்ப தேவைகளை சந்தித்து கொண்டிருக்கும் நீங்கள், தீனுடைய காரியங்களை குறித்து கவலைப்பட்டதுண்டா? அதை உங்கள் குடும்பத்திற்கு சரியாக முறையாக உண்மையாக எத்தி வைத்தது உண்டா?

அன்பான பொறுப்பான கணவர்களே, உலக வாழ்க்கைக்கு தீனு(உணவு) அவசியம் வேணும், மறுமை வாழ்க்கைக்கு தீனு(அமல்) அவசியம் வேணும். சிந்தித்து பாருங்கள்.

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். இதைப் படிக்கும் உங்களுக்கு அழுப்பு வந்துவிடக்கூடாது, அதனால் இப்போதைக்கு இது போதும்

ஆக மொத்தத்தில் கணவனும் தவறு செய்கின்றான், மனைவியும் தவறு செய்கின்றாள். எப்போது கணவன் மனைவி இவர்கள் வாழ்வில் நல்ல அமல்களை கடைப்பிடிப்பதோடு ஒருத்தருக்கொருத்தர் உண்மையாக, உறுதியாக, பாசமாக இருக்கின்றனரோ அன்று முதல் அந்தக் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சீராக இருக்கும்.

இப்படிக்கு.
K.M.A.ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்,
உரிமையாளர், அதிரை 13 வாடி வண்டிப்பேட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக