Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

உறவுகள் ஒங்கட்டும்: ஒரு சுவையான நேரடி அனுபவம்!

தம்மாம் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு சுவராஸ்யமான சம்பவம்!
என் சகோதரரின் மகள் திருமணத்திற்காக என் சகோதரியும் அவருடைய இரண்டு மகள்களும் என் இளைய சகோதரரும் தமிழகம் சென்றனர்.

அவர்களை வழி அனுப்புவதற்காக நானும் என் உறவினர்களும் தம்மாம் ஏர்போர்ட் சென்றிருந்தோம். போர்டிங் போடும் கியூவில் நின்று கொண்டிருந்தோம்.
எங்களுக்கு ஒரு ஆறு நபருக்கு முன்பாக ஒரு இந்து சகோதரரும், அவருடைய மனைவியும் பிள்ளைகளும் நின்றிருந்தனர். அவர்களும் சென்னை செல்கின்றனர். அப்போது ஒருவர் போய் அந்த இந்து தம்பதியரிடம் ஏதோ கேட்கிறார். பதிலுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என தெரியவில்லை.
பிறகு என்னிடம் வந்தவர், “பாய்… என் மனைவி ஊருக்கு செல்கிறார். நாங்கள் அபுகைக்கில் இருக்கிறோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக என் மனைவியை விசிட் விசாவில் அழைத்து வந்தேன். விசா காலம் முடிந்து விட்டதால் அவரை ஊருக்கு அனுப்புகிறேன். தம்மாம்-கொழும்பு-சென்னை என்பதால் என் மனைவி தனியாக செல்ல பயப்படுகிறார். உங்களுக்கு முன்னால் நிற்கும் இந்து தம்பதியரிடம் என் மனைவி சென்னை செல்லும் வரை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு நாங்களே பிள்ளையும் குட்டியுமாக செல்கிறோம். இதில் இது வேறையா?அதெல்லாம் முடியாது என மறுத்து விட்டனர். அதனால் தயவு செய்து…” என அவர் இழுக்கும்போதே நான் இடைமறித்து, “உங்கள் மனைவியும் என் சகோதரி மாதிரிதான். என் தங்கையுடன் உங்கள் மனைவியையும் சென்னை வரை பாதுகாப்பாக என் தம்பி அழைத்து செல்வார்” என்று கூறியதும் அவரது முகத்தில் ஆயிரம் வாட் வெளிச்சம் மின்னிட்டது.
“நன்றி பாய்…” என்றவரிடம், “முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்னு சொல்லக்கூடிய இந்த காலத்தில் நீங்கள் எப்படி…?” என நான் இழுத்ததும் என்னை இடைமறித்த அவர், “பாய்… மஞ்சள் காமாலைக்காரனுக்குத்தான் காணும் பொருளெல்லாம் மஞ்சளாக தெரியும். முஸ்லிம்களிடம் இருக்கும் மனிதாபிமானம் இந்துக்களிடமே இல்லை என்பதை கொஞ்ச நேரத்துக்கு முன்பே பார்த்து விட்டேன். உங்கள் தங்கையும் பிள்ளைகளுடன்தான் செல்கிறார். உதவி என கேட்டதும் வாஞ்சையுடன் நீங்கள் பேசிய விதம் உங்கள் மார்க்கத்தின் தனிச் சிறப்பை அடையாளப்படுத்தி விட்டது” என்று சொன்னவரை பார்த்து அமைதியாய் சிரித்தேன்.
அவருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி சென்னை ஏர்போர்ட்டில் அவருடைய குடும்பத்தாரிடம் அவருடைய மனைவியை என் உறவுகள் ஒப்படைத்து விட்டு ஊர் சென்றனர். இந்தத் தகவலையும் அவரே எனக்கு போன் செய்து சொன்ன விதம் பாராட்டிற்குரியது. உறவுகள் விரிவடையட்டும். உறவுகள் ஓங்கட்டும்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக