Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 29 மே, 2015

புத்தம் போதிக்கும் யுத்தம்..!

பர்மா தற்போது மியான்மர் என அழைக்கப்படும் இந்த தேசம் இந்தியா, வங்தேசம், சீனா, தாய்லாந்து, லாவொஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கரைகளில் அமைந்துள்ள மிகவும் இயற்கை வளம் மிக்க நாடு. இருந்த போதிலும் நிலையான அரசியல் சூழலின்மையாலும் உள்நாட்டு போர்களாலும் உலக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவே விளங்குகிறது.
பர்மா மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில் உள்ளது. மனித உரிமை மீறல்கள், குழந்தை தொழிலாளர்கள், ஆள்கடத்தல், பேச்சுரிமையின்மை ஆகியவற்றில் உலகளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சுமார் 130 இன மக்கள் பர்மாவில் வாழ்கின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையினர் பௌத்தர்கள். முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பழங்குடியினர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.
பர்மாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதனுடைய 6 கோடி மக்கள் தொகையில் 4% சதவிகிதம் என பௌத்தர்களால் சூழப்பட்டுள்ள பர்மா அரசு கூறினாலும் பர்மாவில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதால் 10% அளவிற்கு முஸ்லிம்கள் வாழக்கூடும் என்று பிற அரசு சாரா அமைப்புகள் கூறுகின்றன. இதில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழக்கூடியது பர்மாவின் வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள ராக்கினே மாகாணம். இது அராகன் மாகாணம் எனவும் அழைக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளுக்கிடையில், அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு அகதிகளை விட மோசமான நிலையில் பர்மாவின் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது. எல்லாவற்றையும் விட மோசமாக பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இல்லாத காரணத்தால் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்கள் நடத்தும் வன்முறைகள் உலக மக்களின் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படாமலேயே இருந்துள்ளது.
புத்த மதம் சாந்தி, சமாதானம், அஹிம்சை ஆகியவற்றிற்கு பெருமை பெற்றது என்பது தான் உலக மக்கள் அறிந்து வைத்திருப்பது. ஆனால் இந்த புத்த பிட்சுக்களின் வெறியாட்டம் ஆயிரக்காணக்க முஸ்லிம்களையும், பழங்குடியினரையும் அழித்திருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பெளத்தர்களின் மதவெறித் தன்மையை நாம் உணர்ந்தது ஏதோ இலங்கையில் தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது தான். ஆனால், இஸ்லாம் பர்மாவில் வந்தேறிய காலம் முதலாகவே உணவிற்காக கூட ஒரு உயிரினத்தை கொல்ல தயங்கும் பௌத்தர்கள் தன்னுடைய மத வெறித் தன்மையினால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்துள்ளனர்.
இணையதளத்தின் ஆளுமையினால், அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்களால் நடத்தப்பட்ட ஜூன் 2012 ராக்கினே மாகான கலவரங்கள் உலக மக்களின் பார்வையில், முஸ்லிம்கள் பர்மாவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சிறிதளவு உணர வைத்துள்ளது. பர்மாவில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் நடந்துகொண்டிருக்கும் போதிலும் நம்மில் பலரின் செவியில் முதல் முறையாக விழுந்திருக்கக் கூடியது ஜூன் மாதம் நடைபெற்ற ராக்கினே மாகாண கலவரமாகத் தான் இருக்கக் முடியும்.
இஸ்லாம் பர்மாவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னதாக நுழைந்தது. அன்றிலிருந்து இன்று வரை பல மன்னர்கள், பல சாம்ராஜ்ஜியங்கள், ஆங்கிலேயர்களின் காலணியாதிக்கம், ஜனநாயகம், இராணுவ ஆட்சி என பல்வேறு முறைகளில் பல்வேறு மக்களின் ஆதிக்கத்தில் பர்மா இருந்துகொண்டு வருகிறது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்திருந்தாலும், எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் ஆண்டிருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை அகதிகளைப் போலத் தான் பர்மா முஸ்லிம்களின் நிலை உள்ளது. முஸ்லிம்களின் நிலையையும், முஸ்லிம்களுக்கு எதிராக பர்மாவில் காலங்காலமாக நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது இக்கட்டுரை.
பர்மாவின் முதல் முஸ்லிமும், இஸ்லாத்தின் வருகையும்
அல்லாஹ்வின் பாதையில் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதற்கு நபித் தோழர்கள் பல கண்டங்கள், பல கடல்கள் தாண்டி சென்றனர். அதன் தொடர்ச்சியாக பர்மா மக்களிடையே இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக வந்திறங்கியவர் முஹம்மது இப்னு அல் ஹனஃபிய்யா. இவர் ஹிஜ்ரி 60ஆம் ஆண்டு (கி.பி.680) பர்மாவின் முதல் முஸ்லிமாக அந்நாட்டின் வங்காள விரிகுடாவின் கரைகளில் தனது காலடியை எடுத்து வைத்தார். இவரைத் தொடர்ந்து துருக்கி, பாரசீகம், அரேபிய தீபகற்பம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் வணிகர்களாகவும் மாலுமிகளாகவும் வரத் தொடங்கினர்.
அரசர் அனவ்ரஹாதா, கி.பி 1055ல் பர்மாவின் முதல் பேரரசை நிறுவுவதற்கு முன்னதாகவே முஸ்லிம்கள் பர்மாவின் முக்கிய வணிகங்களில் பங்கேற்று அங்கு குடியேறத் தொடங்கினர்.
முஸ்லிம்களின் வருகையாலும் அவர்களின் தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொண்டதாலும் பல பூர்வீக பர்மா மக்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.
கி.பி 9 ஆம் நூற்றாண்டில் சீனாவை தேடி நிலத்தின் வழியாக வந்த பாரசீகர்கள் பர்மாவின் வடக்கு எல்லை மூலமாக இங்கு குடியேற தொடங்கினர். சீன முஸ்லிம்களை பாந்தேயர்கள் (கச்ணtடச்தூண்) என்றும் பூர்வீக பர்மாவின் முஸ்லிம்களை பாதியர்கள் (கச்tடடிண்) என்றும் அழைத்தனர். அதுமட்டுமல்லாமல் அங்குள்ள பூர்வீக மக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலமாகவும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாகவே முஸ்லிம்கள் பர்மாவோடும் அதன் மக்களோடும் ஒன்றோடு ஒன்றாக கலந்து விட்டனர்.
புத்த சாம்ராஜ்ஜியங்களில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளின் தொடக்கம்
பர்மாவின் முதல் புத்த சாம்ராஜ்ஜியம் 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதில் முதலில் உருவானது பாகன் சாம்ராஜ்ஜியம். புத்த சாம்ராஜ்ஜியங்களின் துவக்கத்திற்கு பிறகு தான் புத்த பிட்சுகளின் மதவெறியாட்டமும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் தொடங்கின. மன்னான் யசாவின் (Hmannan Yazawin) எனப்படும் பர்மாவின் அரசர்கள் பற்றிய வரலாற்று குறிப்பேட்டில் முதல்முறையாக புத்த சாம்ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் வருகையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்குறிப்பேட்டின்படி கி.பி. 1055ஆம் ஆண்டு பயாத் குடும்பத்தை சார்ந்த பயாத் வி, பயாத் தா எனப்படும் இரு அரேபிய முஸ்லிம் சகோதர மாலுமிகளின் கப்பல் நடுக்கடலில் சேதமாகி தண்ணீரில் மூழ்கியதால் அருகில் உள்ள தாடன் எனும் கடற்கரை நகருக்கு தப்பிச் சென்றனர். அந்த ஊரை சார்ந்தவர்கள் அவர்களை ஒரு முழு யானையின் வலிமையுடையவர்கள் என்று கூறினர். இதை கேட்ட தாடனின் மன்னன் இவர்களால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி இரு சகோதரர்களில் ஒருவரை தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது கொன்று விட்டான். இவரே புத்த சாம்ராஜ்ஜியத்தால் கொல்லப்பட்ட முதல் முஸ்லிம். மற்றொரு சகோதரர் பயத் தா தப்பி ஓடி பாகன் சாம்ராஜ்ஜியத்தின் அரசன் அனவ்ரஹ்தாவிடம் தஞ்சம் புகுந்து அரசனிடமே வேலை செய்தார். அவர் பொபா என்ற இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து ஷ்வே, பியின் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இரு மகன்களை பெற்றெடுத்தார்.
ஷ்வே,பியின் சகோதரர்களும் தங்கள் தந்தையின் வழி அனவ்ராஹ்தா மன்னரிடத்தில் பணி புரிந்தனர். பின்பு மன்னரின் போர்ப்படையில் போர் வீரர்களாக திகழ்ந்தனர். சீனா பர்மாவின் பாகன் சாம்ராஜ்ஜியத்தை தாக்க முற்படும் பொழுது இந்த சகோதரர்கள் பலம் வாய்ந்த சீன படையையே அஞ்ச வைத்து விரட்டி அடித்தனர். இருந்த போதிலும் ஷ்வே, பியின் சகோதரர்கள் புத்த கோயில் கட்டுவதற்கு உதவாததால் மதவெறிபிடித்த அனவ்ரஹதா மன்னன் இச்சகோதரர்கள் இருவரையும் கொன்று வீழ்த்தினான்.
இதற்கு பின்பும் பாகன் சாம்ராஜ்ஜியத்தின் போர்ப் படையில் வீரர்களாக அதிக அளவில் அம்மன்னர்கள் முஸ்லிம்களையே பணியமர்த்தினர். அப்போதைய சட்டத்தின்படி மன்னரின் இனத்தை சார்ந்த மற்றொருவன் மன்னரை கொன்று வீழ்த்தினால் அவனே மன்னன் எனும் சட்டம் இருந்தது. இதை கருத்தில் கொண்ட அரசர்கள் முஸ்லிம்களையே போர் படையின் தளபதிகளாகவும், படை வீரர்களாகவும் பணியில் அமர்த்தினர். இருந்த போதிலும் நீதியுடனும் விசுவாசத்துடனும் இருந்த முஸ்லிம்களை புத்த வழிபாடுகளில் ஈடுபடாத ஒரே காரணத்தால் புத்த மன்னர்கள் அவர்களுக்கு மரண தண்டனை அளித்தனர்.
16ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் அதிக அளவில் புத்த மன்னர்களிடத்தில் வேலை செய்ய தொடங்கினர். கி.பி. 1550-1589 வரை ஆண்ட பயின்ட் நாங் எனப்படும் அரசன் முஸ்லிம்கள் தங்கள் உணவிற்காக கால்நடைகளை ஹலால் முறையில் அறுப்பதை தடை செய்தான். மேலும், முஸ்லிம்களின் பண்டிகைகளான ஈதுல் அல்ஹா (ஹஜ் பெருநாள்), ஈதுல் ஃபித்ரா (நோன்பு பெருநாள்) ஆகியவற்றை கொண்டாடுவதற்கு தடை விதித்து புத்த மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை நிரூபித்தான். இவன் முஸ்லிம்களை கட்டாயமாக புத்த மதத்திற்கு மதம் மாற்றம் செய்யவும் உத்தரவிட்டான். மறுத்த முஸ்லிம்களுக்கு வழக்கம் போல் மரண தண்டனை வழங்கப்பட்டது.
முதல் முறையாக பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது 17ம் நூற்றாண்டில் தான். முகலாய மன்னரான ஷாஜஹானின் மகன்களான ஷாஹ் ஷூஜாவிற்கும், ஔரங்கசீப்பிற்கும் ஷாஜஹானின் மரணத்திற்கு பிறகு யார் அடுத்து நாட்டை கைப்பற்றுவது எனும் போட்டி நிலவிய போது இதில் ஔரங்கசீப்பிடம் தோற்றுப்போன ஷாஹ் ஷூஜா தன்னுடைய படைகளுடன் தற்போதைய பர்மாவின் அராகன் பகுதிக்குள் தஞ்சம் புகுந்தார். அப்போதைய அராகன் பகுதியின் புத்த அரசராக இருந்த சண்டதுடாமா (கி.பி. 1652-1687) ஷாஹ் ஷூஜா அராகன் பகுதியில் தன் படைகள் மற்றும் குடும்பத்துடன் குடியேற அனுமதித்தார். ஷாஹ் ஷூஜா ஹஜ்ஜுக்கு செல்வதற்கு அராகன் அரசனிடம் தன்னிடம் இருக்கும் வெள்ளி மற்றும் தங்கத்தை செலுத்தி கப்பல் வாங்குவதென முடிவெடுத்தார்.
ஆனால், சண்டதுடாமா எனும் அந்த அரசன் ஷாஹ் ஷூஜாவின் மகளை கப்பலுக்கு விலையாக கேட்டான், மேலும், ஷாஹ் ஷூஜாவின் செல்வத்தை பார்த்து பேராசை கொண்டான். இதை கேட்ட ஷாஹ் ஷூஜா தன்னுடைய படையை வைத்து அராகன் அரசனை அழிக்க முற்பட்டார். பின்பு தோற்றுப்போன அவரும் அவருடைய படை வீரர்களும் கொல்லப்பட்டனர். மேலும் பெண்களை சிறையில் அடைத்து அவர்களுக்கு உணவளிக்காமல் சாகும் வரை பட்டினி போடும் படி கட்டளையிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அராகன் பகுதிக்கு வந்த அனைத்து இந்திய முஸ்லிம்களையும் கொன்று குவித்தான் சண்டதுடாமா.
புத்த அரசர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளும் வன்முறைகளும் ஒவ்வொரு நூற்றாண்டும் அரங்கேறிக்கொண்டே இருந்தன. 18ம் நூற்றாண்டின் இறுதியில் போடவ்பயா எனும் புத்த அரசன் மையடு எனும் பகுதியை சேர்ந்த நான்கு பர்மா முஸ்லிம் இமாம்களை பன்றி இறைச்சி உண்ணும் படி வற்புறுத்தி அவர்கள் மறுத்த போது அவர்கள் நான்கு பேரையும் கொலைச் செய்து விட்டான்.
புத்த மன்னர்களின் சுமார் ஆயிரம் ஆண்டு ஆட்சியின் போது நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் இது ஒரு துளியாகவே இருக்கக்கூடும். வரலாற்றில் பதிவு செய்யப்படாத பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு இருக்கலாம். இந்த புத்த மன்னர்களின் ஆட்சியின் போது தான் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று புத்த சாமியார்கள் அஹிம்சையை போதித்து பல்வேறு மக்களை அழைத்தனர். ஒரு பக்கம் புத்தர்கள் அமைதியானவர்கள், ஒரு எறும்பைக் கூட கொல்வதற்கு தயங்குபவர்கள் என்று உலக மக்கள் நினைத்துக் கொண்டிருக்க புத்த மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பர்மா ஒரு உதாரணம்.
ஆங்கிலேய ஆட்சியில் பர்மாவின் முஸ்லிம்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொன்பாவுங் வம்சம் பர்மாவை ஆண்டு கொண்டிருந்த போது தன்னுடைய நிலப்பரப்பை விரிவுப்படுத்த முடிவு செய்தது . இந்தியாவின் அஸ்ஸாமை ஒட்டியுள்ள அராகன் பகுதியை தங்களுடன் இணைக்க முடிவு செய்தனர். அஸ்ஸாம் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்ததால் அஸ்ஸாமிற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று நினைத்தார்கள் ஆங்கிலேயர்கள். இது முதல் ஆங்கிலோ-பர்மா போருக்கு (1823-1826) வித்திட்டது. இந்த போரில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் இந்தியாவுடன் அராகன் பகுதியை இணைத்தனர். அராகன் பகுதி ஆங்கிலேயர்களிடம் வந்தவுடன் ஏராளமான வங்காளத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை அவர்கள் அராகன் பகுதியில் பணியமர்த்தினர். அவ்வாறு அராகன் பகுதியில் வந்தேறியவர்கள் தான் இன்று ராக்கினே மாகாணத்தில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள், இவர்கள் பர்மாவின் சிறுபான்மை முஸ்லிம்களுள் ஒரு பெரும் பகுதியாக இன்று வரை இருக்கின்றனர்.
பின்னர் திருப்தி அடையாத ஆங்கிலேயர்கள் தெற்கு பர்மாவில் உள்ள பர்மா தேக்குகளையும், ரப்பர் மரங்களையும் அடைய வேண்டும் என நினைத்து 1852ல் இரண்டாம் ஆங்கிலோ-பர்மா போரும், 1885ல் மூன்றாம் ஆங்கிலோ-பர்மா போரையும் நிகழ்த்தி முழு பர்மாவையும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். 1885 வரை மியான்மர் எனும் பெயரைக் கொண்டிருந்த அந்நாட்டை ஆங்கிலேயர்கள் அப்போது பர்மா என்று மாற்றினர். இப்பொழுது மீண்டும் மியான்மர் என மாற்றப்பட்டு விட்டது. முழு பர்மாவையும் அடைந்த உடன் பர்மாவை பிரிட்டிஷ் இந்தியாவின் உடன் ஒரு மாகாணமாக இணைத்தது ஆங்கிலேய அரசு.
பிரிட்டிஷ் காலாணியாக பர்மா இருந்த போது கூலி வேலைக்காரர்களாகவும், சிறு தொழில் செய்வதற்கும் இந்திய முஸ்லிம்கள் பர்மாவில் குடியேற தொடங்கினர். 1931ம் ஆண்டில் பர்மாவின் தலைநகரம் ரங்கூனில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்தியர்களாக இருந்தனர். அதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். ஆரம்ப காலகட்டங்களில் முஸ்லிம்களும், பௌத்தர்களும் ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்திருந்தாலும் அது நீடிக்கவில்லை.
1930 இந்தியர் எதிர்ப்பு கலவரம்
அதன் பிறகு அடுத்த நாள் வேலைக்கு வந்த அனைத்து பர்மா மக்களிடமும் ஆங்கிலேயர்கள் உங்களின் தேவை இனிமேல் எங்களுக்கு இல்லை என கூறினர். இதனைக் கேட்ட நூற்றுக்கணக்கான பர்மா பௌத்தர்கள் அனைவரும் இந்தியர்களுக்கு எதிராக வெறியாட்டத்தை துவங்கினர். இது மிகப்பெரிய இந்தியர் எதிர்ப்பு கலவரமாகவும், இந்தியர்களுள் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாக இருக்கும் காரணத்தால் இது பின்பு முஸ்லிம் எதிர்ப்பு கலவரமாகவும் மாறியது.
கலவரம் துவங்கி அரை மணி நேரத்திற்குள் இருநூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் (இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டாலும் பெரும்பான்மை முஸ்லிம்கள்) படுகொலை செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு ஆற்றில் வீசப்பட்டனர். ஐந்திற்கு மேற்பட்டோர் ஒன்று கூடி ஆயுதங்களை கீழே போட மறுத்தால் காவல் துறைக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டது.
இருப்பினும், இரு நாட்களில் கலவரம் பர்மா முழுவதும் பரவி நாடு முழுவதும் அனைத்து பகுதியில் வாழும் முஸ்லிம்களும், இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை துல்லியமாக அறிய இயலவில்லை.
இந்திய முஸ்லிம்களும் பூர்வீக பர்மாவின் முஸ்லிம்களும் வேறுபட்டவர்களாக இருந்த போதிலும், இந்திய முஸ்லிம்கள், பர்மா முஸ்லிம்கள், இந்திய இந்துக்கள் ஆகிய அனைவரையும் பௌத்தர்கள் ஒன்றாக ‘கலா’ என்று அழைத்து கலவரங்களின் போது இவர்கள் அனைவரையும் ஒன்றாகவே கருதி அழித்தனர்.
அகதிகளை விட மிக மோசமான நிலையில் வாழும் பர்மா முஸ்லிம்கள்
1938 முஸ்லிம் எதிர்ப்பு கலவரம்
1938ஆம் ஆண்டு ஒரு முஸ்லிம் எதிர்ப்பு கலவரம் அரங்கேறியது. இது பெயரிலும் செயலிலும் முஸ்லிம் எதிர்ப்பு கலவரமாக காட்டப்பட்டாலும் அவர்கள் உண்மையில் எதிர்த்துக் கொண்டிருந்தது ஆங்கிலேயர்களை. ஆங்கிலேயர்களுடன் நேரடியாக மோத முடியாத பர்மாவின் புத்தர்கள் இக்கலவரத்தில் முஸ்லிம்களை ஒரு விளையாட்டுப் பொருளாக பயன்படுத்திக் கொண்டனர். வலிமை மிகுந்த ஆங்கிலேயர்களை எளிதில் விரட்ட முடியாது என்பதை அறிந்த புத்தர்கள் முஸ்லிம்களை துரத்தினால் தனி நாடு கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்தனர். உள்நாட்டு ஊடகங்களும் செய்தித்தாள்களும் தினந்தோறும் முஸ்லிம்களுக்கு எதிராக மக்களிடத்தில் கிளர்ச்சியை உண்டு படுத்தும் வண்ணம் செய்திகளை வெளியிட்டது. இந்த கலவரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் பொருளாதாரத்தையும், வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் இழந்தனர்.
‘பர்மா’ பர்மா மக்களுக்கு மட்டும் பிரச்சாரம்!
பர்மா பர்மா மக்களுக்கு மட்டுமே எனும் பிரச்சாரத்தை துவங்கி பர்மாவின் புத்தர்கள் முஸ்லிம்கள் வணிகம் செய்யும் ‘சுர்தி’ பஜார் எனும் கடைத் தெருவை நோக்கி சென்றனர். புத்தர்கள் வன்முறையில் ஈடுபட முயன்ற பொழுது பர்மா காவல் துறையில் பணிபுரியும் இந்திய போலீஸார் சிலர் கலவரத்தை கட்டுப்படுத்தும் பொழுது 3 புத்த சாமியார்கள் காயமடைந்தனர். பர்மாவின் செய்தித்தாள்கள் இந்திய காவல்துறையினர் புத்த சாமியார்களை தாக்குவது போல் படங்களை தங்கள் செய்தித்தாள்களில் வெளியிட்டு கலவரம் மேலும் பரவுவதற்கு வித்திட்டனர். இக்கலவரத்தில் பர்மா முழுவதும் முஸ்லிம்களின் கடைகள், உடமைகள், வீடுகள், பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டு எரிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்தனர். இக்கலவரம் ரங்கூனிலிருந்து பர்மா முழுவதும் சில தினங்களில் பரவி சுமார் 113 பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டன.
பர்மாவில் புத்தர்கள் நிர்வகித்துவந்த செய்தித்தாள்களே ஆதிக்கம் செலுத்தியதால் முஸ்லிம்களின் பாதிப்பு பற்றியோ, உயிர் சேதம், பொருள் சேதம் பற்றிய எந்த விதமான புள்ளி விவரங்களும் வெளிவரவில்லை. பர்மாவில் முஸ்லிம்கள் சந்தித்த மோசமான கலவரங்களில் இதுவும் ஒன்றாகும்.
1938 இந்தியாவிலிருந்து பர்மா பிரிவு
பர்மாவில் மேலும் மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து லண்டனில் நடந்த இந்தியாவை பற்றியான வட்ட மேஜை மாநாட்டில் (Round Table Conference) பர்மாவில் முஸ்லிம்களுக்கு முழு குடியுரிமை கொடுப்பது, வழிபாட்டு சுதந்திரம், சிறுபான்மையினர் தங்கள் கலாச்சாரத்தை பின்பற்றும் சுதந்திரம், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை பராமரிக்க முஸ்லிம்களுக்கு பொது வருவாயில் பங்கு இறுதியாக இந்தியாவிலிருந்து பிரித்து பர்மாவை பிரிட்டீஷ் காலனியின் தனி நாடாக நிர்வகிப்பது ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கப்பட்டது. இறுதி திட்டமான பர்மாவை தனி நாடாக பிரிப்பது மட்டுமே கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1938-ஆம் ஆண்டு பர்மா இந்தியாவின் ஒரு மாகாணமாக செயல்பட்டுக் கொண்டிருந்ததிலிருந்து விலகி தனி நாடாக செயல்படத் தொடங்கியது. இதன் விளைவாக பர்மாவில் குடியேறிய ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பினர். ஒரே நேரத்தில் அனைத்து இந்திய முஸ்லிம்களும் ரங்கூனை விட்டு வெளியேறியதால் அங்கு வணிகத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் பங்கு பெற்ற காரணத்தினால் கடைத் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பிரிவுக்கு பிறகு பர்மாவின் பூர்வீக முஸ்லிம்களும், அரகன்(ரக்கானே) மாகாணத்தின் ரோஹிங்கிய முஸ்லிம்களும் மற்றும் சிறிதளவில் இருக்கும் சீன மலாய முஸ்லிம்களும் பர்மாவில் தொடர்ந்து இருக்கத்தொடங்கினர்.
இரண்டாம் உலகப் போர் பர்மா முஸ்லிம்களின் பாதிப்பு
பர்மா தனி நாடாக பிரித்தெடுக்கப்பட்டதற்கு பிறகு தொடங்கிய இரண்டாம் உலகப்போர் பர்மாவின் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேயர்களின் காலனி நாடுகளை ஜப்பான் கைப்பற்ற முயன்றது. அப்பொழுது ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஜப்பானியர்களால் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இரண்டாம் உலகப்போரின் காலத்தில் ஜப்பானியர்களால் நூற்றுக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அக்காலத்தில் ஜப்பானியர்களின் வேதனைகளை தாங்க முடியாமல் சுமார் 22,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மாவின் எல்லையை கடந்து பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள பகுதிக்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது. 1942 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று மின்பியா மற்றும் மரோஹாங் நகரங்களில் வாழ்ந்த சுமார் 5000 முஸ்லிம்களை ராக்கினே மாகாண தேசியவாதிகளும் ஜப்பானியர்களும் கொன்று குவித்தனர். பர்மாவில் எவ்வித கலவரமாக இருந்தாலும் எந்த நாடு பர்மாவை கைப்பற்ற முயன்றாலும் அதில் பாதிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுபவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தனர்.
சுதந்திர போராட்டத்தின் உச்சக்கட்டமும் பர்மாவின் சுதந்திரமும்
1945 களில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருக்கும் பொழுது முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாடு கருதி சில இயக்கங்கள் தொடங்கப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்கது ஆஇ எனப்படும் பர்மீஸ் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜெனரல் ஆங்சேன் என்பவரால் துவங்கப்பட்ட AFPFL எனப்படும் அன்டி ஃபாஸிஸ்ட் பீபுல்ஸ் ஃப்ரீடம் பார்ட்டி (பாசிஸத்திற்கு எதிரான மக்கள் சுதந்திரக் கட்சி) ஆகிய இரு இயக்கங்களும் துவக்கத்தில் ஒன்றாகவே செயல்பட்டன. யு ரசாக் எனப்படுபவர் பர்மீஸ் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக 1945ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது ஆMஇயை AFPFL உடன் இணைத்தார். பின்பு அவர் பர்மாவின் கல்வித்துறை அமைச்சரானார்.
அப்பொழுது AFPFL துவங்கிய ஜெனரல் ஆங் சேன் பர்மாவின் பிரதமராக இருந்தார். பிற உள்நாட்டு அரசியல்வாதிகளின் சதியால் ஜெனரல் ஆங்சேனும் யு ரசாக்கும் ஒன்றாக கொலை செய்யப்பட்டனர். அக்காலத்தில் பர்மாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற முக்கியமான முஸ்லிமாகவும், முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கு பாடுபட்டவராகவும் யு ரசாக் விளங்கினார். காலப்போக்கில் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள மற்ற பிரிட்டிஷ் காலணி நாடுகளுக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு 1948ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி பர்மா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரத்திற்கு பிறகு பர்மா எனும் பெயர் மியான்மர் என மாற்றப்பட்டது.
அடுத்து யு ராஷித் என்பவர் AFPFLன் முக்கிய பொறுப்பில் முஸ்லிம்கள் சார்பில் இருந்திருந்தாலும் கட்சியின் வளர்ச்சிக்காகவும் நாட்டின் சூழ்நிலைகளை கருதி முஸ்லிம்களின் உரிமைகள் சிலவற்றை அவர் விட்டுக்கொடுத்ததால் முஸ்லிம்களிடத்தில் அவருக்கு நல்ல வரவேற்வு கிடைக்கவில்லை. பர்மாவின் சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு பிறகு யு னு என்பவர் AFPFLன் சார்பாக பிரதமராக பதவியேற்று சில நாட்களிலேயே பர்மீஸ் முஸ்லிம் காங்கிரஸை AFPFL லிருந்து விலகிக்கொள்ள வற்புறுத்தினார்.
பின்பு சிறுபான்மை மக்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் யூ னு புத்த மதத்தை பர்மாவின் தேசிய மதமாக அறிவித்தார். தீவிர புத்தரான யூ னு முஸ்லிம்கள் ஹலால் முறையில் கால்நடைகளை வெட்டுவதற்கு தடை விதித்து ஈதுல் அல்ஹா (ஹஜ் பெருநாள்) நேரத்தில் மட்டும் விலக்களித்தார். ஒரு முஸ்லிம் ஹலால் முறையில் ஒரு ஆட்டை அறுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒவ்வொரு ஆட்டிற்கும் அரசிடம் அனுமதி பெற வேண்டும் எனும் சட்டமும் அமலுக்கு வந்தது. இவ்வாறு சுதந்திர பர்மா முஸ்லிம்களின் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறத் தொடங்கியது.
1948 முதல் ஜனநாயக நாடாக இயங்கிக்கொண்டிருந்த பர்மாவால் ஜனநாயகத் தன்மையை நீண்ட நாட்கள் தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. ஜனநாயகத்தின் தளர்வு, சிறுபான்மையினரின் பறிக்கப்பட்ட உரிமைகள் ஆகியவை 1962 முதல் பர்மாவின் இராணுவ ஆட்சிக்கு வித்திட்டது.
இராணுவ ஆட்சியில் முஸ்லிம்கள்
1962 ஆம் ஆண்டு நி வின் என்பவரால் வழிநடத்தப்பட்ட மியான்மரின் இராணுவம் பர்மாவின் ஆட்சியை கைப்பற்றியது. இந்த இராணுவ ஆட்சி கடந்த 2011 ஆண்டு வரை சுமார் 50 வருடங்கள் நீடித்தது. நி வின் அதிகாரத்திற்கு வந்த பிறகு முஸ்லிம்களின் நிலைமை இன்னும் மோசமாக மாறியது. இராணுவத்தில் பணியாற்றிய அனைத்து முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர். புத்த மக்கள் முஸ்லிம்களை கேவலமாக பார்க்க சித்தரிக்கப்பட்டனர். இஸ்லாத்தை அதன் வழியில் சரியாக பின்பற்றுபவர்கள் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிட்டது. புத்தர்களோடு கலந்து அவர்களை ஆதரிக்கும் முஸ்லிம்களை புத்தர்கள் அவ்வளவு வன்முறையில் ஈடுபடுத்துவது இல்லை. புத்தர்கள் அல்லாத எவரும் பர்மாவில் நிம்மதியாக வாழ முடியாது என்னும் சூழலை இந்த இராணுவ ஆட்சி உருவாக்கியது. ஆல் பர்மா முஸ்லிம்கள் யூனியன் ஆகிய இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் மீது தீவிரவாத இயக்கம் என்னும் பொய்க்குற்றச்சாட்டு பர்மாவின் ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டது.
முஸ்லிம்கள் அகதிகளாகவே நடத்தப்பட்டனர். முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. பர்மா புத்த நாடென்று அறிவிக்கப்பட்டதால் புத்த மதத்தையும் புத்த கலாச்சாரத்தையும் பின்பற்றுபவர்கள் மட்டுமே பர்மாவைச் சார்ந்தவர்கள் மற்றவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற கருத்து அனைத்து புத்தர்களிடத்தும் புகுத்தப்பட்டது. குடியுரிமை மறுக்கப்பட்டதால் முஸ்லிம்களால் தங்கள் பிழைப்பிற்காக வெளிநாடுகள் செல்வது கூட இயலாது நிலையில் இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.
1988ல் இராணுவ சர்வாதிகார ஆட்சியை எதிர்த்தும் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தியும் மிகப்பெரிய அளவில் பர்மாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை 8888 கிளர்ச்சி என்று அழைத்தனர். ஜனநாயகத்தை வற்யுறுத்தி போராடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை இராணுவ சர்வாதிகாரிகள் கொன்று குவித்தனர். இறுதியில் போராட்டக்காரர்களின் எழுச்சியை பொறுக்க முடியாமல் மே 31, 1989 அன்று பர்மாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னால் பிரதமரும் AFPFLன் தலைவருமான ஆங் சேனின் மகள் ஆங் சேன் சூ குயின் கட்சியான நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி 80% தொகுதிகளில் வெற்றி பெற்றது. இராணுவ சர்வாதிகாரிகள் ஆங் சேன் சூ குயின் கைகளில் நாட்டை ஒப்படைக்க மறுத்து இராணு ஆட்சியை தொடந்தனர். இந்த இராணுவ ஆட்சி கடந்த 2011 வரை நீடித்தது.
பர்மாவில் இராணுவ ஆட்சியின் போது பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இல்லாததால் அனைத்து ஊடகங்களும் இராணுவ அரசின் பிடியில் இருந்தது. பர்மாவின் 50 ஆண்டு இராணுவ ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் கலவரங்களும் பல்வேறு நடந்திருந்தாலும் அவற்றில் சிலவற்றைத் தவிர அனைத்தையும் நம்மால் சேகரிக்க முடியவில்லை. இருப்பினும் பர்மாவின் இராணுவ ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரங்களில் சிலவற்றை சேகரித்து எழுதியுள்ளோம்.
1997 மண்டலே கலவரம்
மே 1997ன் போது முஸ்லிம்களுக்கும் புத்தர்களுக்கும் இடையிலான இனப்பிரச்சனைகள் மண்டலே கலவரமாக உருவானது. 18ஆம் நூற்றான்டில் மன்னர் பொடவ்பயாவால் நிறுவப்பட்ட ஒரு புத்தர் சிலை மறுசீரமைப்புச் செய்யப்பட்டு மண்டலே நகரில் நிறுவப்படுவதற்க்காக கொண்டுவரப்பட்டது. மறு சீரமைப்பு செய்து கொண்டுவரப்பட்ட போதே சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்ததாலும் சிலைக்கு நடுவில் ஒரு ஓட்டையிடப்பட்டுள்ளது என்று கூறியும் சுமார் 100-150 புத்த சாமியார்கள் இதை முஸ்லிம்கள் தான் செய்திருக்க வேண்டும் என்று எண்ணி வன்முறையில் ஈடுபட தொடங்கினர்.
ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த இவர்கள் பள்ளிவாசல்களையும், முஸ்லிம்களின் கடைகள், வீடுகள், வாகனங்கள் ஆகியவற்றை தீக்கிறையாக்கினர். இக்கலவரத்தில் பள்ளிவாசலிலும் நுழைந்து இறை வேதமான குர்ஆனையும் மற்ற இஸ்லாமிய நூல்களையும் வீதிக்கு எடுத்து வந்து எரித்துச் சாம்பலாக்கினர். இக்கலவரம் கைங்டான் மற்றும் மண்டலே நகரங்களில் நடந்தது. பர்மா அரசின் கணக்கின் படி 3 முஸ்லிம்கள் மட்டுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களின் உயிரிழப்பும் பொருளிழப்பும் பெரிய அளவில் இருக்கும் என்று அரசு சாரா நிறுவனங்கள் கூறின.
2001 டாவுங்கூ கலவரம்
2001 ஆம் ஆண்டு “ஒரு கலாச்சாரம் அழியும் அபாயம்” எனும் தலைப்பில் புத்த சாமியார்களால் துண்டு பிரசுரங்கள் மியான்மர் முழுவதும் விநியேகிக்கப்பட்டது. இதன் விளைவாக மே-15,2011 அன்று முஸ்லிம்களுக்கு எதிராக டாவுங்கூ நகரில் கலவரம் துவங்கியது. முஸ்லிம்களை மியான்மரில் (பர்மாவில்) தொடர்ந்து இருக்க விட்டால் புத்த கலாச்சாரமே அழிந்துவிடும் என்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வண்ணம் அத்துண்டு பிரசுரங்களில் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
கலவரம் துவங்கிய முதல் நாளான மே-15,2011 அன்று டாவுங்கூ நகரில் அமைந்துள்ள ஹான் தா பள்ளிவாசலில் தொழுதுக் கொண்டிருந்த 20 முஸ்லிம்கள் புத்த சாமியார்களால் பள்ளிவாசலிலேயே படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் சிலர் இராணுவ ஆட்சியின் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டனர். கலவரம் கட்டுக்கடங்காமல் புத்தர்கள் நகரத்தின் அனைத்து பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களை கொன்று குவித்ததோடு சுமார் 11 பள்ளிவாசல்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன, முஸ்லிம்களின் 400 வீடுகள் தீயிடப்பட்டன கலவரத்தின் இறுதியில் 200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
பர்மாவின் இராணுவ அரசு புத்த சாமியார்களை கலவரத்தை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது கலவரத்தை நிறுத்த வேண்டும் என்றால் டாவுங்கூ நகரில் அமைந்துள்ள இரு பழைமை வாய்ந்த பள்ளிவாசல்களான ஹான் தா பள்ளிவாசலும், டாவுங்கூ ரயில் நிலைய பள்ளிவாசலும் இடிக்கப்பட வேண்டும் என தங்களது கோரிக்கைகளை அரசிற்கு வைத்தனர். இதற்கு செவிசாய்த்த புத்த இராணுவ அரசு இரு இறை இல்லங்களையும் புல்டோசர்கள் மூலம் அரசு செலவிலேயே இடித்து தரைமட்டமாக்கியது. பின்பு டாவுங்கூ நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மே 2002 வரை மூடப்பட்டே இருந்தன. அனைத்து முஸ்லிம்களும் வேறு வழியின்றி பள்ளிவாசல் இருந்தும் வீட்டிலேயே தொழும் கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டனர். இக்கலவரத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கான டாவுங்கூ நகர முஸ்லிம்கள் யங்கான் (ரங்கூன்) போன்ற தொலைதூர நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
2010 ஜனநாயகத்தின் மலர்ச்சியும் இன்றைய மியான்மர் முஸ்லிம்களும்
ஐக்கிய நாடுகள் சபையின் வலியுறுத்தலாலும் பல சர்வதேச நாடுகளின் கட்டாயத்தின் பெயரில் 2010ல் மியான்மரில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இராணுவ பின்னனியைக் கொண்ட யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மண்ட் பார்ட்டி 77% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உலக நாடுகளும் மியான்மரின் ஜனநாயக ஆதரவு கட்சிகளும் இத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறவில்லை என்றும் இத்தேர்தலில் பல இராணுவ சர்வாதிகாரிகளால் பல மோசடி நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
இன்றளவும் மியான்மரின் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தான் உலகிலேயே மிகவும் அதிகமான கொடுமைகளை அனுபவிக்கும் சிறுபான்மையினர் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. பர்மாவின் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தோற்றத்திலும் மொழியிலும் கலாச்சாரத்திலும் பர்மாவின் மக்களைவிட்டு வேறுபட்டு இருப்பதால் பர்மாவின் புத்தர்கள் இவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதற்கு எதிர்த்து வருகின்றனர்.
மியான்மரில் குடியுரிமையுள்ளவர்களுக்கு தேசிய அடையாள அட்டை போன்ற ஒன்று அளிக்கப்படுகிறது. இதனை பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே அரசு பள்ளிக்கூடங்களில் கல்வி பயில முடியும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற முடியும். இவ்வாறு ரோஹிங்கிய முஸ்லிம்கள் குடியுரிமையின்றி தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க முடியாமலும், அவசர காலங்களில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற முடியாமல் ஒடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். சொந்த நாட்டிலேயே தன்னுடைய இனம், மொழி, மதம் ஆகிய காரணங்களால் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகளை விட மோசமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
அதே போல் ஆண்டாண்டுகளாக ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கும் தாய்லாந்திற்கும் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். வடக்கு தாய்லாந்தில் மியான்மருடனான எல்லை பகுதியில் 9 முகாம்களில் சுமார் 1,11,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றõர்கள் என தாய்லாந்து அரசு கூறியுள்ளது. வங்க தேசத்திலும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய மக்கள் வங்காள அரசின் எந்த ஒரு உதவியும் இல்லாமல் பெண்களையும் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வங்கதேசத்தின் வீதிகளில் வசித்து வருகின்றனர்.
ஜூன் 2012 ராக்கினே மாகாண கலவரம்
மியான்மரின் ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழும் ராக்கினே மாகாணத்தில் ஜூன் 8 ஆம் தேதி முஸ்லிம்களுக்கு எதிராக புத்தர்களால் கலவரம் உருவானது. ஒரு புத்த பெண்ணை பத்து முஸ்லிம்கள் கற்பழித்துவிட்டனர் என்று வழக்கம் போல் ஒரு குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு புத்தர்கள் தங்களுடைய வெறியாட்டத்தை துவங்கினர்.
கலவரத்தின் துவக்கமாக சுமார் 100 பேர்கள் அடங்கிய கொண்ட வெறி கொண்ட புத்தர்களின் கூட்டம் ஜூன் 4ஆம் தேதி முஸ்லிம்கள் சென்றுகொண்டிருந்த பேருந்தை எரித்தனர். இதில் 10 முஸ்லிம்கள் பலியாகினர். பின்பு இம்சசம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஜூன் 8ஆம் தேதி போராட்டத்தில் இறங்கிய முஸ்லிம்களை மியான்மரின் காவல் துறையினர் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இதோடு கலவரம் ஒய்ந்து விட்டது என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த போது ஜூன் 9ஆம் தேதியன்று தான் முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் தொடங்கியது. புத்த வெறியர்களால் 17 கடைகளும் 400க்கும் மேற்பட்ட வீடுகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதில் 7 பேர் கொல்லப்பட்டதாக மியான்மரிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி சித்வே நகரில் பல குடியிருப்பு கட்டிடங்கள் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இக்கலவரத்தினால் சுமார் 2500 குடும்பங்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்தனர். 30,000 பேர் வேறு நகரங்களுக்கு உள்நாட்டு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். கலவரத்தின் இறுதியில் 30 பேர் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று பல செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கலவரத்தின் காரணமாக வங்கதேசத்திற்கு அகதிகளாக 15 படகுகளில் தப்பிச்சென்ற 1500 ரோஹிங்கிய முஸ்லிம்களை வங்கதேச கடற்படை திருப்பி அனுப்பிவிட்டது. இச்சம்பவத்தைப் பற்றி வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் டிபு மோனி கூறுகையில் வங்கதேசத்தின் வளங்கள் அந்நாட்டு மக்களுக்கே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் ரோஹிங்கிய மக்களை அகதிகளாக எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மியான்மரில் வாழும் அவர்களுக்கு மியான்மர் அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
மியான்மர் அரசால் தற்போதைய நிலவரப்படி 80 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான சடலங்களை மியான்மர் இராணுவத்தினர் குவித்துக்கொண்டிருக்கும் படங்கள் அடிக்கடி இணையதளங்களில் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன. இதுவரை, இந்தியாவிலும் சரி உலகளவிலும் சரி இலங்கை தமிழர்களின் படுகொலைகளின் போதும் ஆஸ்திரேலியாவில் சில இந்திய மாணவர்கள் கொலை செய்யப்பட்ட போதும் பொங்கி எழுந்த பெரிய ஊடகங்களோ செய்தித்தாள்களோ ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலை பற்றி எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை.
அனைத்து ஊடகங்களும் முஸ்லிம்களை புறக்கணிப்பதில் உறுதியாக இருப்பதையும், அவை சியோனிச பிடியில் சிக்கித்தவிப்பதையும் இதிலிருந்து நம்மால் தெளிவாக உணர முடிகிறது. ஜூன் 28ன் கணக்குப்படி குறைந்தது 650 பேர் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று பிரிட்டனின் அரசுசாரா நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மியான்மரிலிருந்து வரும் ஒரு சில செய்திகளையும் படங்களையும் வைத்துப்பார்க்கும் பொழுது முஸ்லிம்களின் உயிரிழப்பு ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.
இது வரை மியான்மர் முஸ்லிம்களுக்காக ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தாலும் கூட பெரும்பான்மையான முஸ்லிம்கள் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்பது கூட தெரியாமல் அறியாமையில் இருக்கின்றனர்.
இவ்வாறு முஸ்லிம்கள் மேலும் மௌனம் காத்து வந்தால் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் இப்போது நடந்துள்ள இந்த கலவரம் கண்டிப்பாக இறுதியானதாக இருக்க முடியாது. உலக அளவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் தங்கள் சகோதர, சகோதரிகளுக்காக குரல் கொடுக்கும் வரை இது தொடரத்தான் செய்யும். அதேபோல் அஹிம்சை எனும் முகத்திரையை அணிந்துகொண்டு உலாவும் பௌத்தர்களின் உண்மை முகத்தை பொதுமக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டு யூதர்கள், இந்துத்துவவாதிகள் போன்று ஃபாசிஸ்டுகளின் பட்டியலில் இனி பௌத்தர்களையும் சேர்க்க வேண்டும்.
சர்வதேச அரங்கில் தொடர்ந்து திட்டமிட்ட இன சுத்திகரிப்பையும், கூட்டுப் படுகொலைகளையும், சோதனைகளையும் சந்திந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் நாடுகளின் வரிசையில் இப்போது நாம் மியான்மரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இக்கட்டுரை வாசகர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்று நம்புகின்றோம்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக