Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 11 மே, 2015

கருத்துக்களை’ வரவேற்று! ‘வேறுபாடுகளை’ களைவோம்!! – வி. களத்தூர் ஃபாரூக்

இன்றைய காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரிய அவலமாக இருப்பது கருத்து வேறுபாடுகளும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு இயக்கம் என சமூகத்தை பிரித்து விட்டார்கள். அதனால் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான பிரச்சனைக்கு தீர்வை எட்டுவதை விட்டு தங்களுக்குள் அடித்துக்கொண்டு சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்கிறார்கள்.
இந்த பிரச்சனைகளை எப்படி களைவது? அதற்கு என்னதான் வழி?
ஒருமுறை மௌலானா ஹசன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார்கள். “நமது பிரச்சனைகளுக்கு இரண்டு காரணங்கள்தான். ஒன்று குரானை நாம் கைவிட்டது. மற்றொன்று நமக்கிடையே நடக்கும் உள் சண்டைகள்” என்று கூறினார்கள். அதுதான் இன்றும் நடந்து வருகிறது.
இன்று நாம் குரானை தொட்டே பல நாட்கள் ஆகிவிட்டது. அதனால் அது நமக்கு கற்று கொடுக்கும் விசயங்களிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டோம். குரான் முஸ்லிம்களை சகோதரப் பாசமுள்ளவர்களாக இருக்க சொல்கிறது. உள் சண்டைகள் குறித்து கடுமையாக எச்சரிக்கிறது.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வழிமுறையை பின்பற்றுவதாக சொல்லும் நாம் அவர்களின் உபதேசங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். நபி ஸல் அவர்கள் கூறினார்கள். “என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும்வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” என்று. ஆனால் நாம் ஒருவருக்கொருவர்பரஸ்பரம் அன்பை வளர்ப்பதிற்கு பதிலாக மனஸ்தாபங்களை வளர்த்து வருகிறோம்.
நாம் குரானையும், நபி ஸல் அவர்கள் வழிமுறையையும்   பின்பற்றாததால் இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறோம். பெரும்பாலான சண்டைகள் குறுகிய நோக்கங்களுக்காகவே இருக்கிறது. சிறிய சிறிய கருத்து வேறுபாடுகள்தான் பெரிய பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன.
ஆனால் அதைவிட பெரிய பிரச்சனைகளை பற்றி யாரும் சிந்திக்கவில்லை. இன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் எல்லாப் பக்கங்களிலும் தாக்கப்படுகிறது. தீவிரவாதம் என்ற பெயரால் முஸ்லிம் சமூகம் நசுக்கப்படுகிறது. அவர்களின் அடையாளங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. மற்றொரு பக்கம் கலாச்சார சீரழிவால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. சமூகத்தில் மது, மாது, வட்டி என ஒழுக்கச் சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த சீர்கேடுகளுக்கெதிராக நமது கவனத்தை எப்போது திருப்ப போகிறோம் என்று தெரியவில்லை. சமூகத்தை சீரழிக்கும் இதுபோன்ற விசயங்களுக்கு எதிராக நம்மால் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட முடியவில்லை.
அறிவுள்ள சமூகத்தில் பல கருத்துக்கள் வரத்தான் செய்யும். அதில் நல்ல கருத்துகளை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே அறிவுடமையாகும். ஆனால் தவறு என்று தெரிந்தும் அதை மிகைப்படுத்தி பேசுவதும், ஏட்டிக்கி போட்டியாக செய்வதும்தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருக்கிறது.
கருத்து வேறுபாடுகள் என்பது நபி தோழர்கள், சஹாபாக்கள் காலத்திலேயே இருந்தது. ஆனால் அவர்கள் நம்மை போல சண்டை அடித்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் குரானை பற்றி பிடித்தார்கள். இஸ்லாத்தை உணர்ந்தார்கள். அதனால் வெற்றியும் பெற்றார்கள்.
ஆனால் நாம் அதற்கு நேர்மாறாக இருக்கிறோம். இஸ்லாம் தெளிவாக குறிப்பிடும் விசயங்களில் நாம் உறுதியாக பின்பற்ற வேண்டும். அதேபோல பல கருத்துக்கள் உள்ள ஒரு விசயத்தில் நமக்கு எந்த கருத்து சரி என ஆராய்ந்து அதை பின்பற்றலாம். இதில் நான் பின்பற்றுவதுதான் சரி என்ற வாதம் தேவையில்லாதது.
இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே சமத்துவமும், சகோதரத்துவமும்தான்,  அந்த சகோதரத்துவம்தான் இன்று இஸ்லாமிய சமூகத்தில் குறைந்து வருகிறது.
சிறிய சிறிய வேறுபாடுகளை களைந்து, இஸ்லாமிய சகோதரர்களாக இணைந்து செயல்படுவோம். அதுதான் இன்றைய காலத்தின் தேவையும்கூட.

1 கருத்து:

  1. சகோ. ஃபாரூக் அவர்களுக்கு நன்றி! Jazakhallah Khairan....

    சிறந்த ஆரோக்கியமான, நேர்மறையான சிந்தனை.

    இது போன்ற சிந்தனை இன்றைய இளம் தலைமுறைகளுக்கு எட்ட வேண்டும்.

    இஸ்லாம் மனித குல விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், சமூகத்தில் நீதி செலுத்துவதற்கும் படைத்த ரப்புல் ஆலமீனால் வழங்கப்பட்ட வாழ்க்கை நெறி.

    ஆனால், இன்று முஸ்லிம் சமூகம் இதனை தவறாக விளங்கி இருக்கின்றது.
    நம்பிக்கைகள், வழிபாடுகள் குறுகிய நோக்கத்தில் பார்க்கப்படுகின்றது.

    அதிகார வர்க்கம் செய்கின்ற அநியாயங்களுக்கு எதிராக போராடாமல்,
    சிலை வணகத்திற்கு எதிராக போராடாமல், யூத சியோனிச தாக்குதலுக்கெதிராக போராடமல், முஸ்லிம் சமூகத்தை வழிபாடுகள், பித் அத் பற்றியே பேசும் சமூகமாய் இன்றைய இயக்கங்கள் மாற்றிவிட்டன.

    இஸ்லாத்திற்கு வெளியே உள்ள போராட்ட களத்தையும், போராட்டத்தையும் சத்தியவான்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதைத்தான் பெருமானார் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை நமக்கு சொல்லித் தருக்கின்றது.

    மாறாக முஸ்லிம் சமூகத்திற்குள்ளே எதிரிகளை உருவாக்கி, போராட்ட களத்தை முஸ்லிம் சமூகத்திற்குள்ளே கட்டமைக்க சொல்லித் தரவில்லை.
    இப்படிப்பட்ட தவறான பார்வையினால், கடுணையோடு நடந்துகொள்ள வேண்டியவர்களிடத்தில் குரோதம் காண்பிக்கின்றோம்.

    கடுமையாக போராட வேண்டிய அதிகார வர்க்கத்தினரிடத்தில், சாதுவாகவும், ஆதரவாகவும், அவர்களுடைய அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் பிரச்சாரகராகவும் நடந்து கொள்கின்றோம்.

    எப்போது நாம் விழிக்க போகின்றோம், ரொம்ப தாமதமாவதற்கு அனுமதிக்க வேண்டாமே???

    பதிலளிநீக்கு