Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

தமிழகத்தில் பார்ப்பணுத்துவம்

பார்ப்பனத்துவ ஆதிக்கம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தமிழகத்திலும், சமூக-அரசியல்-கலாச்சார நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெளிவான, உறுதியானக் கொள்கையை அந்தக் கட்சியின் துவக்க விழாவில் செப்டம்பர் 18, 1949 அன்று அறிஞர் அண்ணா அழகாக படம்பிடித்துக் காட்டினார்: “திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான், திட்டமும் வேறு அல்ல, என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டு பட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வட நாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வட நாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக்காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச்
செய்தல் வேண்டும்.” ஆனால் கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. அதே வைதீகபுரியோடும், வடநாட்டு ஏகாதிபத்தியத்தோடும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, பா.ஜ.க. அரசில் அங்கம் வகித்தது, பின்னர் காங்கிரசு அரசிலும் பங்கேற்றது. திரு. கருணாநிதியின் குடும்பத்தினரே பார்ப்பன கோவில்களில் பயபக்தியோடு வழிபடுவதும், கோவிலுக்குப் போய்விட்டு தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதும் வேதனையான “திராவிட முன்னேற்ற” உண்மை.
தமிழகத்தின் இன்னொரு முக்கியக் கட்சியான அ.தி.மு.க. பார்ப்பன மூட நம்பிக்கைகளில் முழு நம்பிக்கையுள்ள ஒரு பார்ப்பனப் பெண்ணான செல்வி. ஜெயலலிதாவால் வழிநடத்தப்படுகிறது. அவர் வெற்றி பெற்ற சிறீரங்கம் தொகுதியில் ஒரு பார்ப்பனர் “பிராமணாள் கபே” எனும் உணவகத்தை 2012 அக்டோபர் மாதம் துவங்கினார். தந்தை பெரியார் காலத்தில் அவரால் போராடி மூடப்பட்ட “பிராமணாள் கபே” தற்போது திரும்பவும் முளைப்பது கவனிக்கப்பட வேண்டிய நிகழ்வு. பெரும்பாலான தமிழக அரசியல் தலைவர்கள் ஜோதிடர்களை சந்திப்பது, ஜாதகம் பார்ப்பது, தோஷ நிவர்த்திக்காகப் பரிகாரங்கள் செய்வது என்றே செயல்படுகின்றனர். பொதுக் கலாச்சாரத்திலும் பிரதோஷம், சந்திராஷ்டமம், அக்ஷயத் திருதியை என்பன போன்ற வார்த்தைகள், கருத்தியல்கள், நம்பிக்கைகள் புகுந்து அழிவைத் தருகின்றன. பார்ப்பன மந்திரங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்கள் வீட்டு விழாக்களிலும் வந்தேறி விட்டன.
இன்னொரு பக்கம் கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள், நியூட்ரினோ ஆய்வு மையம், இராணுவத் தளவாட தயாரிப்பு நிலையங்கள் போன்றவை வரவேற்கப்படுகின்றன. தி.மு.க. - அ.தி.மு.க. எனும் தமிழகத்தின் இரண்டு முக்கியக் கட்சிகளுமே பார்ப்பணுத்துவத்தை எந்தக் கேள்வியும் கேட்காது ஏற்றுக்கொள்கின்றன. தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது மாநிலங்களவை கன்னிப்பேச்சில் (2007) இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசினார். “நான் நிகழ்த்தவிருக்கும் இந்த முதல் பேச்சானது முக்கியத்துவம் வாய்ந்த 123 ஒப்பந்தத்தைப் பற்றிய என் கட்சியின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும்” என்று சொன்ன அவர் “இவ்விஷயத்தில் எங்கள் கட்சியோ அல்லது கட்சித் தலைவரோ தங்கள் நிலைபாட்டிலிருந்து என்றுமே மாறியதில்லை என்பதை நான் இங்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பவர்கள்தாம்” என்றார். தொடர்ந்து பேசிய கனிமொழி பார்ப்பணுத்துவத்தை விவரித்தார்:
இந்த 123 ஒப்பந்தமானது தானாக ஒன்றும் வந்துவிடவில்லை. இதை ஆரம்பித்து அப்போதைய அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்திய பாரதீய ஜனதா கட்சி முதல் இப்பொழுதும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் புதுதில்லி மற்றும் வாஷிங்டனில் உள்ள இன்றைய அரசுகள்வரை, இந்த ஒப்பந்தத்தை நம் நாட்டின் வளர்ச்சிக்கான - அதாவது, 300 மில்லியன் மக்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவித்தல், பாலின மற்றும் ஜாதிப் பாகுபாடு, கிராமப்புறத்தை அலட்சியப்படுத்துதல் மற்றும் கல்லாமையை ஒழித்தல் ஆகியவற்றுக்கான - ஒரு கருவியாகவே கருதிவந்துள்ளனர்.
சீன ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து 1962-ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அண்ணா நிகழ்த்திய சொற்பொழிவில் இடம்பெற்ற வார்த்தைகளோடு கனிமொழி தனது உரையை முடித்துக்கொண்டார்: "நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தற்பொழுது உருவாக்கப்பட்டுவரும் பெருமைமிகு வருகைப் பதிவேட்டில் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) பெயரைப் பதிவுசெய்கிறேன்!". இப்படியாக அண்ணா தனிநாடு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல, கனிமொழி தி.மு.க.வின் தமிழர்நலக் குரலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிய பிறகு, போராடும் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக தி.மு.க. தலைவர் ஓரிரு குழப்பமான அறிக்கைகள் விடுத்தாலும், அவர்களின் பார்ப்பணுத்துவ நிலைப்பாடு அப்படியேத் தொடர்கிறது.
அ.தி.மு.க.வின் கதையும் கிட்டத்தட்ட இதே போன்றதுதான். கூடங்குளம் அணுமின் நிலயத்துக்கு எதிரானப் போராட்டம் 2011 செப்டம்பர் மாதம் துவங்கியபோது, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா அந்தத் திட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். பிறகு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, போராடும் மக்களிடம் “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று உத்தரவாதம் அளித்தார். கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி போராளிகளோடுப் பேசுவதற்கு தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழுவில், அணுசக்தித் துறையைச் சார்ந்த எம். ஆர். ஸ்ரீநிவாசனையே உறுப்பினராக நியமித்தார். பின்னர் 2012 மார்ச் மாதம் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், மீண்டும் கூடங்குளம் திட்டத்தை ஆதரித்தார். 2012 செப்டம்பர் மாதம் காவல்துறை வன்முறையை ஏவிவிட்டு, “கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. அணுஉலை திறக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அணுஉலைக்கு எதிர்ப்பு என்ற கொள்கையுடைய எதிர்ப்பாளர்களின் மாயவலையில் மீனவர்கள் யாரும் விழ வேண்டாம்” என்று கோரிக்கை வைத்தார்.
தமிழகக் காங்கிரசு கட்சி, பாரதீய ஜனதா கட்சி, இந்து முன்னணி போன்ற பார்ப்பணுத்துவ இயக்கங்கள் எல்லாம் போராடும் மக்களை தேசத்துரோகிகள் என்று வர்ணித்தனர். தமிழகத்தில் அணுசக்திக்கு ஆதரவாக, கூடங்குளம் போராட்டத்துக்கு எதிராக எழுதிய, பேசிய, செயல்பட்ட பார்ப்பணுத்துவவாதிகளுள் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள்: ‘தினமலர்’ உரிமையாளர்கள் லெட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி, கோபால்ஜி, ‘துக்ளக்’ ஆசிரியர் சோ ராமசுவாமி, ‘இந்து’ உரிமையாளர் என். ராம், ‘புதிய தலைமுறை’ இதழாசிரியர் மாலன் நாராயணன் உள்ளிட்டோர். தேசிய அளவிலும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற உதவிய (2008) உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அவரைப் போன்ற பல பார்ப்பனரல்லாத இந்திய அரசியல் தலைவர்கள் தங்கள் கொள்கைகளை மறந்து, துறந்து பார்ப்பணுத்துவத்துக்குப் பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கின்றனர். பார்ப்பணுத்துவம் தான் மீட்டெடுத்த முக்கியத்துவத்திலும், அதிகாரத்திலும், ஆதிக்கத்திலும் மூழ்கித் திளைத்து நிற்க, பார்ப்பனத்துவ இயக்குனர்கள் புதிய வல்லரசு தேசபக்தி நாடகத்தைப் பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றனர்.
நன்றி இன்நேரம்.காம்
சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
ஆகஸ்ட் 6, 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக