Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

இணைய கருத்துரிமை சட்ட திருத்தத்தை திரும்ப்பப்பெற வைகோ வலியுறுத்தல்!

இணையங்களில் வெளியிடப்படும் கருத்துரிமையைப் பறிக்கும் விதமான சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், ஆகஸ்டு 11-ஆம் தேதி ஒரு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்.

தமிழ்நாடு அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (Tamilnadu Prevention of Dangerous Activities Act (TPDA) சில திருத்தங்கள் செய்வதற்கு இம்மசோதா வகை செய்கிறது. 'குண்டர் சட்டம்' என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் கீழ் கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இவற்றோடு தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரையில் குண்டர் சட்டம் என்பது, தொடர் குற்றங்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள் மீது மட்டும்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம், முதல் முறையாக குற்றச்செயலில் ஈடுபடுவோருக்குக்கூட ஒரு ஆண்டு காலம் விசாரணை இன்றியே சிறையில் அடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்பத்துறையில் வியத்தகு வளர்ச்சி பெற்று கோடிக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். அரசின் மீது கருத்து மாறுபாடு கொண்டோர், அரசு நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்தோர் கருத்துக்களை பகிர்ந்தால், தற்போது கொண்டுவந்துள்ள சட்டத்திருத்த மசோதாவின்படி நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ள முடியும். தகவல் தொழில்நுட்பக் குற்றங்களை தடுப்பதற்காக கொண்டுவரப்படுவதாக அமைச்சர் தெரிவித்து இருந்தாலும், இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
இச்சட்டத் திருத்தங்கள் அரசியல் சட்டப்பிரிவு 22-க்கு எதிரானது என்று ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் அரசியல் சாசனம் பிரிவு 21 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திர உரிமையையும் தட்டிப்பறிப்பதாக சட்டத் திருத்தம் அமைந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவோர் மீது மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கொண்டுவரப்பட்ட தடா, பொடா போன்ற கொடூர சட்டங்கள், தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அதைப்போலவே குண்டர் சட்டத் திருத்த மசோதா நிறைவேறினால் பெரும்பாலும் அரசின் பழிவாங்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும், பொய் வழக்குகள் புனைவதற்கும் வழிவகுக்கும்.
கொடிய பாலியல் குற்றங்களை தடுப்பது மட்டுமல்ல அச்செயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித கருத்து மாறுபாடும் கிடையாது.
ஆனால், அதே நேரத்தில் நோய் தீர வேண்டுமானால் அதற்காக மூலக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும், குற்றச் செயல்களுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது மதுப்பழக்கம்தான்; குடிவெறியர்களின் கூடா செயல்களுக்கு திரும்புகின்ற திசையெல்லாம் மதுக்கடைகளை அரசே திறந்து வைத்து நடத்துவதுதான் மூலக்காரணம் ஆகும்.
தமிழக அரசு நடத்துகின்ற மதுக்கடைகளை மூட முடியாது என்று சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு, பாலியல் குற்றங்களைத் தடுக்கிறோம் என்று சட்டங்களை கொண்டு வருவதால் மட்டும் சமுதாயத்தை திருத்த முடியாது.
தமிழகத்தின் பண்பாட்டு சீரழிவுக்கும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும் முதன்மை காரணமாக இருக்கின்ற மதுப்பழக்கத்தை அடியோடு ஒழித்துகட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்;
ஜனநாயகத்தின் பெயரால் அச்சுறுத்தலுக்கும், பழிவாங்குதலுக்கும், கருத்துரிமை பறிப்பதற்கும், வகை செய்கின்ற சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி இன்நேரம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக