Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 3 ஏப்ரல், 2013

எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்?


எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்?
எப்படி உள்ளது இளைஞர் சமூகம்?
இன்றைய இளைஞர்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். புதிய விஷயங்களை  கற்றுக் கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள். புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக் கூடியவர்கள்.  கல்வியில் நிரம்ப முன்னேறியுள்ளார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள்.
மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை. பழகி் கொள்கிறார்கள். அவர்களின் ஆற்றல் அளப்பரியது. நிறைய திறமைகள்.கடின உழைப்புக்கும் தயாராக உள்ளார்கள்.ஆண்களும் பெண்களும் இவற்றில் சரிசமமாக உள்ளனர். இவையெல்லாம் நமது இளவல்களை பற்றிய நல்ல செய்திகள்.
கெட்ட செய்திகளும் உண்டு.
புகை பழக்கம், போதை பழக்கம் உள்ளவர்கள் அதிகரிக்கும் அபாயம் தெரிகிறது. செல்போன் மோகம் அதிகரித்ததால் தடம் புரண்டு போகும் அவல நிலை. உடல் ஆரோக்கியம் பற்றி அக்கறை இல்லை. விளையாட்டில் ஆர்வம் இல்லை. விளையாட்டுக் குழுக்கள் இல்லை. விளையாட்டுப் போட்டிகளும் இல்லை. சுயநலம் பெருகி விட்டது. நிறைய இளைஞர்கள் குடிக்கிறார்கள் என்ற செய்தி தினம் தினம் வந்து கொண்டே உள்ளது. சுற்று சூழலும் அதற்கு முக்கிய காரணம். முன்பெல்லாம், டீ குடிக்க வச்சிக்கோ என்று செலவுக்கு கொடுப்பார்கள். இப்போது அது கட்டிங்க்கு என்று மாறி கொண்டுள்ளது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் இளைஞர்களில் கணிசமான எண்ணிக்கையில் தொழுகையாளிகள் இருப்பார்கள். வரும் காலங்களில் அது குறைந்து விடுமோ என்ற ஐயம் உண்டாகிறது. மக்களிடத்தில் இறைவனை பற்றிய அச்சம் இருக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒழுங்கு முறைகள் , ஒழுக்கத்துடன் கூடிய கலாச்சார விழுமியங்கள் காலாவதியாகி விடுமோ?
இருபது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது சூழல்?
இளைஞர்களிடையே கல்வி கற்கும் ஆர்வம் உருவாகிக்கொண்டிருந்தது.. என்றாலும் பட்டதாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பத்தாம் வகுப்பு படித்து விட்டால் பயணம் போய்விடுவார்கள்.
திறமைகளும் சுமார்தான்.. தயங்கி தயங்கி பேசுவார்கள்.. தொழில்நுட்ப அறிவு மிக குறைவு..
ஆனாலும் நல்லவர்கள் நிறைய இருந்தார்கள்.
தவறு செய்ய பயப்படும் சூழல் இருந்தது..
சிகரெட் பிடிப்பதே ஒளிந்து கொண்டுதான் என்ற நிலை..
உள்ளூர் டீக்கடையில் டீ குடிப்பது கூட கௌரவ குறைவு என்று நினைத்தவர்களும் உண்டு.
பெரியவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள்.
வாலிபால், பேட்மிண்டன், கிரிக்கெட் விளையாட்டுக்களில் ஆர்வமாக கலந்து கொண்டார்கள். ஊர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.
அரபு மொழியை கற்றுக் கொள்வதற்கு ஆர்வமாக இருந்த இளைஞர்கள் தினம் மதரஸா பள்ளிவாசலில் அரபி பயின்றார்கள்.
பேச்சுப்பயிற்ச்சிக்காக சங்கத்தில் பேச்சுப் போட்டி நடக்கும்.
இளைஞர்களில் தொழுகையாளிகள் கணிசமாக இருந்தார்கள். நல்ல விசா கிடைக்க வேண்டும் என்று தொழுதவர்களும் அதில் அடக்கம்.
பள்ளிவாசலோடு நெருக்கம் இருந்ததால் நல்ல பழக்கங்கள் இருந்தன. பள்ளி வாசல்களில் வாராவாரம் குர்ஆன் வகுப்புகள் நடக்கும். இளைஞர்கள் குர்ஆன் தஃப்ஸீர்களை கொண்டு ஆய்வு செய்வார்கள்.
ஆக்கபூர்வமான விஷயங்கள் நிரம்ப இருந்தன. என்றாலும் கல்வியும் மற்ற திறமைகளும் குறைவாகத்தான் இருந்தது.
இப்போதைய தேவை
அன்றைய இளைஞர்களிடத்தில் இருந்த ஆக்கபூர்வமான விஷயங்களோடு இன்றைய இளைஞர்களிடம் உள்ள ஆற்றல், திறமைகளை இணைத்தால் அருமையான தன்மைகள் உடையவர்களை கற்பனையில் பார்க்க முடிகிறது. எனவே இப்போதைய தேவை, திறமைகளுடன் கூடிய நல்ல இளைஞர்கள். இளைய சமுதாயத்தை ஆய்வு செய்யும் போது வெறுமனே அவர்களை குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவு படுத்தல் வேண்டும்.
இளைஞர்களே! உங்கள் வாழ்க்கை பற்றி தொலைநோக்கோடு சிந்தியுங்கள்!
ஆரோக்கியம்தான் ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளிலேயே உன்னதமானது. மிகப்பெரிய சொத்து. ஆனால் அதன் அருமை அது இல்லாத போதுதான் தெரிகிறது. எனவே ஆரோக்கியம் பேணுங்கள். ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்தையும் தவர்த்திடுங்கள். உடல் ஆரோக்கியமாய் இருப்பதற்கு நல்ல (ஹலால்) உணவு அவசியம். உள்ளம் ஆரோக்கியமாய் இருக்க நல்ல எண்ணங்கள் அவசியம்.
கெட்ட பழக்கம் வேண்டாம்.
விளையாட்டாக செய்ய ஆரம்பிக்கும் தவறுகள்தான் பிற்காலத்தில் விட முடியாத கெட்ட பழக்கமாகி விடுகிறது. புகைபிடிக்கும் பெரும்பாலோர் அப்படித்தான் சொல்கிறார்கள்இன்று சிகரெட்டால் நுரையீரலில் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படுவோர், மதுவால் கல்லீரலில் கடுமையான பாதிப்புக்கு ஆளானோர், சூதாட்டத்தி்ல் பெரும் செல்வத்தை இழந்தவர்களெல்லாம் முதலில் ஜாலிக்காகவும் டைம்பாசுக்காகவும் தான் ஆரம்பித்திருப்பார்கள்.
எனவே ஜாலிக்காக என்று எதை செய்ய நினைத்தாலும் சற்று யோசியுங்கள்.
உங்களை நம்பி ஒரு குடும்பம்
உங்கள் மீது பாசமும் நேசமும் கொண்டவர்கள், உங்களையே நம்பியுள்ள நெஞ்சங்களையும் ஒரு கணம் மனதில் கொண்டு வாருங்கள். அவர்களுக்காக மட்டுமன்றி மறுமையில் இறைவனுக்கு முன்னால் நிற்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
திறமைகளை வளருங்கள் (skill development)
தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது.
நட்பு வட்டம்
ஒருவருக்கு நல்ல நண்பர்கள் அமைந்து விட்டால் அதைக் கொண்டு ஏராளமாய் சாதி்க்க முடியும். அதே சமயம் கெட்ட நண்பர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். எனவே நண்பர்கள் வேண்டும், அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.
நேரம் தவறாமை
ஒவ்வொரு காரியமும் குறிப்பி்ட்ட நேரத்தி்ல் நிறைவேற்றப்பட வேண்டும். காலந்தாழ்ந்து செய்யும் வேலைகள் உரிய பலன் தராது. எனவே நேரந்தவறாமை மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய திறமை.
பேசும் திறன்
பேசும்போது தெளிவாக, தன்மையாக பேச வேண்டும். அதே சமயம் நிதானமாக நம் எண்ணங்களை புரிய வைக்க வேண்டும்.
மற்ற மொழி கற்றல்
எல்லோர்க்கும் அவரவர் தாய் மொழி மீது அலாதி பிரியம். என்றாலும் கூடுதல் மொழி கற்றுக் கொள்வதால் அனேக நன்மைகள் உண்டு. அடுத்த மொழி கற்பதை ஒரு சுமையாகக் கருதாமல் மகிழ்ச்சியோடு கற்றுக் கொள்ளுங்கள். அது நிச்சயம் கை கொடுக்கும்.
சுத்தம் பேணுதல்
நம்முடைய இருப்பிடத்தையும், உடைகளையும் பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது சுகாதாரம் மட்டுமன்றி, நம்மீது பிறர்க்கு நன்மதிப்பை ஏற்படுத்தும்.
உங்கள் ஓய்வு நேரம் ஆக்கபூர்வமானதாக அமையட்டும்
இது போன்ற இன்ன பிற தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள ஓய்வு நேரத்தை பயன்படுத்துங்கள்.
திருமறை குர்ஆனோடு தொடர்பு வையுங்கள். தினமும் சுபுஹுக்கு பின் கொஞ்சமாவது குர்ஆன் ஓதுங்கள். பொருள் புரிந்து படியுங்கள். உள்ளங்களை தட்டி எழுப்பி, சீர்திருத்தி, பண்படுத்தும் ஆற்றல் இறை வசனஙகளுக்கு நிச்சயம் உண்டு. உணர்ந்து பாருங்கள்.
பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது..
பிள்ளைகள் மீது பெற்றோர்களின் கண்காணிப்பு மிக அவசியம். நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களில், ஒரு தவறுக்கான சூழல் ஏன் உருவானது என பார்க்கும் போது கண்காணிப்பு இல்லை என்பதே பதிலாக வருகிறது. எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளீ்ர்களோ அந்த அளவு கண்காணிப்பும் அவசியம்.
நேர்மறை எண்ணங்கள் (positive approach)
உங்கள் பிள்ளைகள் திறமையானவர்களாக நல்லவர்களாக வருவார்கள் என்று நீங்கள் உறுதியாக நம்புங்கள்.
ஒரு சமயம் ஒரு பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி செல்வதே பெரிய அவஸ்தையாக உள்ளதென்று என்னிடம் பள்ளி ஆசிரியைகளையும் முதல்வரையும் பற்றி குற்றப்பட்டியல் வாசித்தார். இத்தனைக்கும் நன்றாய் படிக்கும் மாணவி.
பிள்ளைகளை மிரட்டியே நல்ல மதிப்பெண் எடுக்க வைக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார்கள் என்று எனக்கு புரிந்தது. பள்ளி முதல்வரை சந்தித்தேன்.
நன்றாகபடிக்கும் மாணவி பயத்தின் காரணத்தால் மதிப்பெண் குறைகிறது. நீங்கள் ஏன் நேர்மறையாக(positive approach) அணுகக்கூடாது? ‘உன்னால் முடியும் நிச்சயமாக நீ வெல்வாய் என்று நம்பிக்கையை உள்ளங்களில் விதையுங்கள்’ என்றேன்.  சில வாரங்களில் அவரை சந்தித்தபோது, ‘ நீங்கள் சொன்னபடி என் அணுகுமுறையை மாற்றினேன், நல்ல முன்னேற்றம், நன்றி’ என்றார்.
அந்த வருடம் அந்த பள்ளியில் அதற்கு முன்னில்லாத அளவுக்கு அதிக மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றனர். அந்த மாணவி 92 சதவீதம் மதிப்பெண் பெற்று குடும்பத்திலேயே அதுவரை யாரும் பெறாத மதிப்பெண் என்ற அந்தஸ்தை பெற்றார்.
இது நேர்மறை அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி.
பெற்றோர்கள் நல்லவற்றை ஏவிக்கொண்டேயிருங்கள்.
நம்பிக்கை வையுங்கள். நல்லவர்களாக வருவார்கள். நல்ல பண்பாடு, பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுங்கள். மார்க்கக் கல்வி மிக அவசியம். புகட்டுங்கள். ஆனந்தம் என்றும் தங்கும்.

நன்றி தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத்

1 கருத்து:

  1. மாஷா அல்லாஹ்!

    உபயோகமான கட்டுரை!

    கட்டுரையாளர் மீது அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அருள் புரிவானாக! ஆமீன்!

    பதிலளிநீக்கு